திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.1 திருப்பூந்தராய்
பண் - இந்தளம்
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.
1
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.
2
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.
3
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.
4
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சோபொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.
5
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
7
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.
8
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
சுரதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.
9
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரிகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.
10
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.11 சீர்காழி
பண் - இந்தளம்
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.
1
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.
2
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.
3
புற்றானைப் புற்றர வம்மலை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
4
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.
5
செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.
6
துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.
7
குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னாணடி கூறுமே.
10
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.17 திருவேணுபுரம் (சீர்காழி)
பண் - இந்தளம்
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.
1
அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.
2
ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே.
3
காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே.
4
அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே.
5
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.
8
கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே.
9
போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே.
10
கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.25 திருப்புகலி (சீர்காழி)
பண் - இந்தளம்
உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.
1
பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே.
2
வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.
3
கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடைந் தன்பு செய்யுமே.
4
பாதத் தாரொலி பலிசி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.
5
மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யிம்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே.
6
கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.
7
அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.
8
மாலும் நான்முகன் றானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுள்
பால தாடிய பண்ப னல்லனே.
9
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாவகை யாவு ணர்வினுள்
நின்ற வன்னிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே.
10
புல்ல மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை இருநி லத்துளே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.29 திருப்புகலி (சீர்காழி) - திருவிராகம்
பண் - இந்தளம்
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.
1
வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.
2
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம் தென்பர்
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.
3
மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
4
முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.
5
வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.
6
நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.
7
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகள் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.
8
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.
9
கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.
10
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தணை மேத்துவர் வானமுடை யாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.40 திருப்பிரமபுரம் (சீர்காழி)
பண் - சீகாமரம்
எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.
1
தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.
2
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.
3
சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளும் நல்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.
4
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.
5
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.
6
சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.
7
எரித்தமயில் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெருவார்தாம் தக்காரே.
8
கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.
9
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.
10
தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.49 சீர்காழி
பண் - சீகாமரம்
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறும்
கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.
1
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.
2
நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன் துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே.
3
மையி னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.
4
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே.
5
மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே.
6
தான லம்புரை வேதி யரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.
7
மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே.
8
பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவின் நாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.
9
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடுங் கூடிய
வேடனே சுட லைப்பொ டியணி
அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே.
10
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.54 திருப்புகலி (சீர்காழி)
பண் - காந்தாரம்
உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
1
நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
2
அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
எழின்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.
3
கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இருந்தீரே.
4
நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
5
மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
6
களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.
7
பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெதியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
8
சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.
9
நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுறையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
10
ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.59 சீர்காழி
பண் - காந்தாரம்
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.
1
ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.
2
வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.
3
மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாலே.
4
பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுரதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.
5
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.
6
புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.
7
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.
8
மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.
9
அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.
10
ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைதத தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.65 திருப்பிரமபுரம் (சீர்காழி)
பண் - காந்தாரம்
கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
1
கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம் புரம்அமர்ந் தாரே.
2
சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலுங்
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
3
நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரம் புரம்அமர்ந் தாரே.
4
தோடு செவிக்கிலா போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம் புரம்அமர்ந் தாரே.
5
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினோ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம் புரம்அமர்ந் தாரே.
6
பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம் புரம்அமர்ந் தாரே.
7
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம் புரம்அமர்ந் தாரே.
8
அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம் புரம்அமர்ந் தாரே.
9
வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம் புரம்அமர்ந் தாரே.
10
பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.70 திருப்பிரமபுரம் (சீகாழி) - திருச்சக்கரமாற்று
பண் - காந்தாரம்
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
1
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.
2
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குரவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
3
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
4
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
5
தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குரநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா ரேத்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.
6
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குரவோ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப்
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
7
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குரவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.
8
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குரநற் காழி சாயாப்.
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்.
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத.
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
9
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய.
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய.
விழுமியசீர் வெங்குரவோ டோங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்.
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
10
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் புறவங் காழி.
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்.
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்.
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
11
காவி மலர்புரையங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்.
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை.
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன.
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.
12
பாண்டிய மன்னனுடைய சுரப்பிணி தீர்க்க மதுரை சென்று ஆசனத்தில் எழுந்தருளியபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.73 திருப்பிரமபுரம் (சீர்காழி) - திருச்சக்கரமாற்று
பண் - காந்தாரம்
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
    புகலிவெங் குரமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச்
    சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
    கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப் பெற் றிமையவர்தம்
    பகையெறிவித் திறைவ னூரே.
1
திருவளருங் கழுமலமே கொச்சைதே
    வேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
    காழிதகு சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
    தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
    கண்டத்தோன் விரும்ப மூரே.
2
வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
    பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
    காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
    மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குரவ
    தரன்நாளும் அமரு மூரே.
3
மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
    புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
    கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
    சிலம்பனூர் காழி சண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
    பயன்நுகர்வோர் பரவு மூரே.
4
தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
    வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
    விண்ணவர்தங் கோனூர் வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
    வம்பெருகு தோணிபுரஞ் சீர்
உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
    உலகத்தில் உயர்ந்த வூரே.
5
புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
    சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
    பூந்தராய் தோணிபுரஞ் சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
    கொச்சைவா னவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
    யுதைத்துகந்த அப்ப னூரே.
6
வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
    கோனூர்வண் புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குரமிக் கோரிறைஞ்சு
    சண்பைவியன் காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
    தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
    பால்வண்ணன் பயிலுமூரே.
7
மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
    சிலம்பனூர் காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
    வேணுபுரங் கமல நீடு
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
    தராய்தோணி புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
    செற்றமலைச் சிலைய னூரே.
8
இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
    பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத்
    தயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குரமாசி
    லாச்சண்பை காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந்
    தணர்வேத மறாத வூரே.
9
மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
    கொச்சையிந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
    குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
    சிலம்பனூர் செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி
    சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.
10
ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
    கொச்சைகழு மலமன் பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
    சிரபுரமொண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
    புகலிவெங் குரவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
    வகைநின்றான் தங்கு மூரே.
11
அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
    தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
    புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
    வேணுபுரம் அயனூர் மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
    தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.
12
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.74 திருப்பிரமபுரம் (சீர்காழி) - திருக்கோமூத்திரி
பண் - காந்தாரம்
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
    குறைவிலாப் புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
    பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
    புகழ்ச்சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
    கழுமலம்நாங் கருது மூரே.
1
கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்
    தோணிபுரம் கனக மாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
    யுலகாருங் கொச்சை காழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
    செங்கமலத் தயனூர் தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
    முடியண்ணல் தங்கு மூரே.
2
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
    யொளிமருவு காழி கொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
    தோணிபுரங் கற்றசூழ ரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப்
    புறவம்அய னூர்பூங் கற்பத்
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
    குருக்கங்கை தரித்தோ னூரே.
3
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
    தோணிபுரந் தரியா ரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
    தராய்புகலி யிமையோர் கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
    சண்பைசெழு மறைக ளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
    னூருலகில் விளங்கு மூரே.
4
விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
    வேணுபுரம் மேக மேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
    யெழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை செங்குரமாச்
    சிரபுரம்வன் னஞ்ச முண்டு
களங்கமலி களத்தவன்சீர் கழுமலங்கா
    மன்னுடலங் காய்ந்தோ னூரே.
5
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
    கழுமலமாத் தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
    இருங்கமலத் தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
    தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
    பகைகெடுத்தோன் திகழு மூரே.
6
திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
    பிரமனூர் காழி தேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
    வயங்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
    குருவெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
    பணிந்துலகில் நின்ற வூரே.
7
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
    புரநிகழும் வேணு மன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
    சண்பைவளர் புறவ மோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்
    தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
    தாங்காக்க மிக்க வூரே.
8
மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
    வஞ்சண்பை காழி கொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
    பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
    வெங்குரவல் அரக்கன் திண்டோள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
    டழித்துகந்த எம்மா னூரே.
9
எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
    கழுமலநற் புகலி யென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
    தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
    னூர்தராய் சண்பை காரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
    விளங்கியஎம் இறைவ னூரே.
10
இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
    னூர்இமையோர்க் கதிபன் சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
    புரங்குணமார் பூந்தராய் நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
    கொச்சைகழு மலந்தே சின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
    பரிசறியோ அம்மா னூரே.
11
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
    குருக்கொச்சை புறவ மஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
    தோணிபுரந் தேவர் கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
    வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன்
    தமிழ்கற்போர் தக்கோர் தாமே.
12
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.75 சீர்காழி
பண் - காந்தாரம்
விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.
1
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎந் நம்பனே.
2
சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் நல்லனே.
3
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
4
தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாகக்
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.
5
சுரியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.
6
முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
அடியி லங்குங்கழ லார்க்கவேயன வேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்
கொடியி லங்கும்இடை யாளொடுங்குடி கொண்டதே.
7
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.
8
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.
9
நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.
10
கண்ணும் மூன்றுமடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.81 திருவேணுபுரம் (சீர்காழி)
பண் - காந்தாரம்
பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
1
சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
2
கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
3
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.
4
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
5
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
6
நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.
7
இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விடைமண்டு முடிநெறிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.
8
தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.
9
நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ சரனென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.
10
இப்பதிகத்தில் பதினொன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.83 திருக்கொச்சைவயம் (சீர்காழி)
பண் - பியந்தைக்காந்தாரம்
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்தன்
    நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
    திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
    விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
    கொடியாடு கொச்சை வயமே.
1
விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
    விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
    தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும நிறையப் பரந்து
    கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
    வளர்கின்ற கொச்சை வயமே.
2
படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
    களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
    இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
    நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
    மறையோது கொச்சை வயமே.
3
எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
    முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
    பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
    வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
    வளர்கின்ற கொச்சை வயமே.
4
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
    னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
    இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
    வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
    நிறைகின்ற கொச்சை வயமே.
5
புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
    வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
    நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
    யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
    வரைமேவுகொச்சை வயமே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
    முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
    டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
    விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
    அடிதேடு கொச்சை வயமே.
8
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
    முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
    அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
    விரைதேரப் போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
    வயல்மேவு கொச்சை வயமே.
9
கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
    இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
    விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
    குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
    மணநாறு கொச்சை வயமே.
10
இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
    உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
    இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
    தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
    அழகா இருப்ப தறிவே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.89 திருக்கொச்சைவயம் (சீர்காழி)
பண் - பியந்தைக்காந்தாரம்
அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
1
சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
2
பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.
3
கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
4
ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.
5
மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
8
சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா ரென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.
9
குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
10
கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வான ரோடும் புகலவர் முனைகெட வினையே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.96 சீர்காழி
பண் - பியந்தைக்காந்தாரம்
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே.
1
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.
2
கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந்
திரிய இல்பலிக் கேகுங் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.
3
சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.
4
மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.
5
நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.
6
நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.
7
கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.
8
மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.
9
புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு யென்று முறைமைசெய் காழிநன் னகரே.
10
ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு(*)

(*) இச்செய்யுளின் பின்மூன்றடிகள் சிதைந்துபோயின.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.97 சீர்காழி - திருவிராகம்
பண் - நட்டராகம்
நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.
1
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.
2
சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
3
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்பநச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.
4
கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.
5
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று
7
பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.
8
காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
9
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.
10
தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.102 திருச்சிரபுரம் (சீர்காழி)
பண் - நட்டராகம்
அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
    அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
    வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
    சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
    வினையொடும் பொருந்தாரே.
1
கோல மாகதி உரித்தவர் அரவொடும்
    ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
    சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
    பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
    தொழவினை நில்லாவே.
2
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
    தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
    கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
    சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
    குற்றங்கள் குறுகாவே.
3
மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
    காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
    பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
    சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்
    கருவினை யடையாவே.
4
பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
    பனிமதி ஆகாசம்
ஓரம் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
    தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
    செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
    அடியவர் வருந்தாரே.
5
ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
    வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
    அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
    இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
    வல்வினை அடையாவே.
6
பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
    பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
    ஆடும்வித் தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
    தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
    தொழுமவர் தளராரே.
7
இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
    எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
    நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
    றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
    தெழவினை குறுகாவே.
8
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
    மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்
    கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
    பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
    வினையவை கூடாவே.
9
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
    பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
    தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின்
    மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
    விட்டிடும் மிகத்தானே.
10
பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
    பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
    நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
    விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
    பரமனைப் பணிவாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.113 சீர்காழி
பண் - செவ்வழி
பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.
1
மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.
2
கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.
3
குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.
4
விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.
5
தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.
6
மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.
7
முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.
8
பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே.
9
உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக்
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே.
10
கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.122 திருப்புகலி (சீர்காழி)
பண் - செவ்வழி
விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.
1
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.
2
வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
புண்டரிக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.
3
திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.
4
ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்
பூவிலாரும் புனற்கொய்கை யில்வைகும் புகலியே.
5
தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியுமந்தண் பொழில்சூழ் தழகாரும் புகலியே.
8
கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
நீண்டநாரை இரையாரல் வாரநின்ற செறுவினிற்
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியதே.
9
தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே.
10
எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com